மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குடா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (13) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் விபுலானந்தா இசை நடன கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாவற்குடா கிழக்கு, 4 ஆம் குறுக்கு வீதி, விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த விபுலானந்தா இசை நடன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவி வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காக்காச்சிவட்டை, மண்டூர் பாடசாலை வீதியை சேர்ந்த 22 வயதுடைய சங்கரத்துரை பானுஜா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடன கல்லூரியில், கட்புலன் திறன் நுட்ப துறையில் இரண்டாம் வருட மாணவியாக இவர் கல்வி பயில்வதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடவியல் பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.