மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு மாகாணசபையையும் இணைக்க தீர்மானம்

221 0

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற செயலணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வதுடன், வடக்கு மாகாண சபையையும் பங்காளராக்கவேண்டும் என்று கோரி வடக்கு மாகாண சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடமாகாணசபையின் 124ஆவது சபை அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபையில் சிறப்பு கவனயீர்ப்பு ஒன்றை கொண்டு வந்த மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் உரையாற்றுகையில்,

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த செயலணியில் தமிழ் மக்களும் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் மீள்குடியமர்த்தப்படவேண்டும் என நாங்கள் கேட்டுவந்தோம்.

அதனை பேச்சில் அங்கீகரித்த செயலணி, பின்னர் தனியே சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியமர்த்தும் பணிகளைச் செய்து வருகின்றது.

இந்த நிலையை மாற்றியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் செயலணியில் இணைத்துக் கொள்ளவேண்டும்.

அதன் ஊடாகவே தமிழ் மக்களையும் மீள்குடியமர்த்துவதற்கான செயலணியாக இந்த செயலணியை மாற்ற இயலும் என்று கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,

அரசியல் கட்சிகளை உள்ளீர்ப்பதனால் மேற்படி செயலணி முன்னர் செய்த தவறுகள் எல்லாவற்றையும் சரி என நாங்கள் ஒத்துக் கொள்வதாக அமையும்.

ஆகவே வடக்கு மாகாண சபையை அதற்குள் உள்ளீர்க்கவேண்டும் என தீர்மானம் எடுங்கள் என்று கூறினார்.

இதற்கமைய மேற்படி செயலணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும், வடக்கு மாகாண சபையையும் உள்ளீர்க்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கூறப்பட்டது.

Leave a comment