சித்தபிரமை பிடித்தவர்கள் போன்று செயற்படுகிறது அரசாங்கம்-சிவாஜிலிங்கம்

208 0

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் 124 ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் சபைத் தவலைர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட செயலணிகள் தொடர்பாக உரையாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே பிரதி அமைச்சர்கள் நியமனங்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் அங்கு உரையாற்றுகையில்,

ஜனாதிபதி சித்த பிரமை பிடித்தவர்கள்போல் செயற்படுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் இது தெளிவாகிறது.

பிரதி அமைச்சர்களாக யாரை தெரிவு செய்வது என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்த நாடு சகல இனங்களுக்கும் மதங்களுக்கும் எல்லோருக்கும் பொது என சொல்லிக்கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் தாயகங்களில் நடைபெற்ற பிரச்சினைக்குப் பின்னர் சகல இனமக்களும் இடம்பெயர்ந்தார்கள்.

ஆகவே அனைத்து மக்களும் மீண்டும் மீள்குடியேற்றப்பட வேண்டும். இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோதும் தெரிவித்திரந்தார்.

ஜனாபதியும் பிரதமரும் தமது கொள்கைகளை சரியாக நடைமுறைப்படுத்துவார்களானால் இடம்பெயர் செயலணியை முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் மூன்று இனத்தவர்களையும் இணைத்து இருக்கலாம்.

1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் எனக் கூறினாலும் வலிகாமம் வடக்கில் 87 – 90 வரை மிக மோசமாக இடம்பெயர்வை சந்தித்தார்கள். 87 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொக்கிளாய் நாயாறுப் பகுதியில் இருந்து பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

இலங்கை பூராகவும் இடம்பெயந்த பலர் எவ்வித உதவிகளுமின்றி இருக்கின்றார்கள். இவர்களுக்கு உதவிகளை செய்யாதுள்ளார்கள். தற்போது வடக்கு, கிழக்கு செயலணி என பெருந்தொகையானவர்களை உருவாக்கிவிட்டு என்னத்தைச் சாதிக்கப் போகின்றீர்கள்.

நான்கு மாதங்களில் வடக்கு மாகாண சபை நிறைவடையவுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறாது விட்டால் வடமாகாண முதலமைச்சரும் இருக்கமாட்டார். இக்காலத்தில் அவைத் தலைவர் இருப்பார். அவரையாவது இதில் இணைக்க முடியுமா என்றால் அவ்வாறும் இல்லை.

ஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் தெரியாது பிழை விடுவதில்லை. தெரிந்தே பலவற்றை செய்கிறது. 11 இலட்சம் மக்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். நாட்டின் அரசாங்கம் தன்னை யார் ஆட்சிபீடம் ஏற்றினார்கள் என்பதை மறந்துவிட்டு சித்த பிரமை பிடித்தவர்கள்போல் செயற்படுகிறது.

மீள் குடியேற்றம் அனைத்து மக்களுக்கும் தான் உரியது. சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் தான் குடியேற்றப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள். நாங்கள் எங்களுக்கு தெரிந்த தீர்மானத்தை எடுக்கின்றோம்.

50 ஆயிரம் வீட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் தான் பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது இந்தியாவை புறந்திள்ளிவிட்டு சீன வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளார்கள். எங்களை மீண்டும் மீண்டும் சுரண்டிக்கொண்டு எங்கள் மக்களை பேராட்ட பாதைக்குள் தள்ளுவதாகவே முடியும் என்ற எச்சரிக்கையை அரசாங்கத்திற்கு வெளியிடுகின்றோம் என்றார்.

Leave a comment