மன்னாரில் விற்கப்பட்ட மண்ணிலும் மனித எச்சங்கள் இருக்கலாமென சந்தேகம்

199 0

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்த அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு தொகுதி மண் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மண்ணிலும் மனித எச்சங்கள் காணப்படலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இந்நிலையை நிவர்த்தி செய்ய மன்னாரில் மண் கொள்வனவு செய்யப்பட்ட 4 வீடுகளின் உரிமையாளர்கள், கிராம அலுவலகர் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்த அகழ்வு செய்யப்பட்ட மண்ணை கடந்த மார்ச் மாதம் 27 திகதி மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொள்வனவு செய்திருந்தார்.

இதன்போது அவர் கொள்வனவு செய்த மண்ணில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் காணப்பட்டதாக அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அவருடைய முறைப்பாட்டை தொடர்ந்து மன்னார் பொலிஸார், மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேரடியாக சென்று பார்வையிட்டதோடு, குறித்த மண்ணில் இருந்து மனித எலும்புகள் அகழ்வுகள் இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து மன்னார் நீதவான் முன்னிலையில் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்கப்பட்டு வந்தது.

மேலும் மன்னார் பொது மாயனத்தின் பின் பகுதியில் பாதுகாக்கப்பட்டிருந்தது மற்றைய மண் தொகுதியானது மன்னார் பிரதேசத்தில் உள்ள சில மக்களிடம் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து குறித்த வளாகத்திலும் அதே போன்று அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது சந்தோகத்திற்கு இடமான அதிகமான மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

குறித்த மனித எச்சங்கள் தொடர்பான உண்மை தன்மை பற்றி விசாரணைகளை மோற்கொள்ள உதவியாக மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மண்ணை கொள்வனவு செய்த மக்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு, விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யு.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ச மக்களிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த வேண்டு கோளுக்கு அமைவாக விற்பனை நிலைய மண்ணை பெற்றுக் கொண்ட மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சின்னக்கடை, உப்புக்குளம், பெரியகமம் , மூர்வீதி ஆகிய கிராமங்களை சேர்ந்த 4 பேர் தமது கிராம அலுவலகர் ஊடாக வழங்கிய முறைபாட்டை தொடர்ந்து குறித்த தனியாருக்கு செந்தமான வீடுகளில் கொட்டப்பட்ட மண்ணை நேற்று (12) மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த மண்களிலும் மனித எச்சங்கள் காணப்படலாம் என அஞ்சபடுகின்றது.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment