இயக்கத்தில் இருக்கும்போது தமிழினிக்கு புற்றுநோய் இல்லை-தாயார் தெரிவிப்பு

381 0

thamiliniதமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கு விடுதலைப் புலிகள் யக்கத்தில் இருக்கும்போது புற்றுநோய் இருக்கவில்லை என்றும், இத்தகைய கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகமொன்றிற்குக் கருத்துத் தெரிவித்துள்ள தமிழினியின் தாயார்….
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும்போது எனது மகள் தமிழினிக்கு புற்றுநோய் இருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான சாட்சியம் அளிக்கும் நிகழ்வில் சாட்சியம் அளித்ததனை காணொளிகள் மூலமாகப் பார்த்தேன்.

அத்துடன் வடக்குமாகாண சபை அமைச்சர் ஒருவர் கூறியதனையும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்வையிட்டேன். அவ்வாறு எனது மகளுக்கு புற்றுநோய் இருக்கவில்லை. அதனை அவர்களால் நிரூபிக்க முடியுமா?

அவ்வாறு ஏற்கனவே அவரிற்கு புற்றுநோய் இருந்த விடயம் அவர்களுக்கு தெரியும் என்றால் ஏன் அதனை எனக்கு முதலே கூறவில்லை.

நான் எனதுமகள் விச ஊசி ஏற்றப்பட்டு இறந்தாரா? அல்லது யுத்தத்தின் பின்னர் புற்றுநோய் வந்துதான் இறந்தாரா என வாதிட வரவில்லை.

ஆனால் எனது மகள் தமிழினிக்கு விடுதலைப்புலிகள் காலத்தில் புற்றுநோய் இருந்தது என்பதனை ஏற்றுக்கொள்ள என்னால் மட்டுமல்ல யாராலும் முடியாது.

ஏனெனில் தமிழினிக்கு விடுதலைப்புலிகள் காலத்தில் புற்றுநோய் இருந்தது என்ற கருத்தைப் பார்த்தால் 2006ஆம் ஆண்டிற்கு முற்பகுதியில் இருந்திருக்க வேண்டும்.

அவர் இறந்தது 2015ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பூரண சிகிச்சை உரிய முறையில் பெற்றால் மாத்திரமே அக் கொடிய நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

சில வேளைகளில் அதுவும் பயனளிப்பதில்லை. சிகிச்சை எதனையும் பெற்றுக் கொள்ளாத தமிழினி ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தால் எவ்வாறு இவ்வளவு வருடக்கணக்கில் உயிருடன் இருந்தார்?

உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். பொய்யான தகவல்களை வெளியிட்டு உடைந்து போயுள்ள எம் மனங்களை மீண்டும் மீண்டும் உடைக்காதீர்கள். எனவும் தமிழினியின் தாயார் கேட்டுக் கொண்டார்