நீர் நிலைகளில் நீர் ஆவியாவதை தடுக்க மிதக்கும் சூரிய மின் நிலையங்கள் அமைக்கப்படும்

455 0

நீர் நிலைகளில் நீர் ஆவியாவதை தடுக்க ரூ.1,125 கோடியில் மிதக்கும் சூரிய மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில் 5 ஆயிரத்து 68 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் ஆரல்வாய் மொழி பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளி கொணர்வதற்காக, சமூக ரெங்கபுரத்தில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி, சிவகங்கை மாவட்டம், கோந்தகை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், பரலி ஆகிய இடங்களில் மொத்தம் மூன்று புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 1,669 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

உடன்குடி அலகு 1, 2×660 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும், 2×150 மெகாவாட் இந்த் (ஐ.என்.டி.) பாரத் அனல் மின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும் மற்றும் புதிய காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1,039 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

சென்னை மாநகரத்தின் மின் கட்டமைப்பை மேம்படுத்த, சென்னை மாவட்டத்தில் கணேஷ் நகர் மற்றும் கே.கே.நகர், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மற்றும் எண்ணூர்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறைமலை நகர் மற்றும் பல்லாவரம்; ஆகிய ஆறு இடங்களில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 932 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் கே.புதூர், திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜகோபாலபுரம், திருப்பூர் மாவட்டத்தில் கலிவேலம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி என மொத்தம் நான்கு இடத்தில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 716 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காரப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தளுர்; நாகை மாவட்டத்தில் ஆச்சாள்புரம், வேலூர் மாவட்டத்தில் மேல்பாடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், தருமபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி, திருப்பூர் மாவட்டத்தில் பணப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சின்னதடாகம், மதுரை மாவட்டத்தில் தானியமங்கலம் மற்றும் மாணிக்கம்பட்டி ஆகிய 10 இடங்களில் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 110 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு நீர்த் தேக்கங்களில் நீர் ஆவியாவதை தடுக்கவும் மற்றும் சூரிய சக்தி கட்டாய கொள்முதல் அளவை அதிகரிக்கவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், இந்திய சூரியசக்தி கழகமும் இணைந்து முதன்முறையாக 250 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களை 1,125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாத்தியக்கூறின் அடிப்படையில் அமைக்கப்படும்.

65 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மோயாறு புனல் மின் நிலையத்தின் ஆயுட் காலத்தை மேலும் 25 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்திடவும், நிறுவு திறனை 3×12 மெகாவாட்டிலிருந்து 3×14 மெகாவாட்டாக அதிகப்படுத்திடவும், 67 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

2023-ம் ஆண்டு சூரிய எரிசக்தியில் 8,884 மெகாவாட் திறனை அடைவதற்கு ஏதுவாக “சூரிய எரிசக்திக் கொள்கை 2012” மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம், தமிழ்நாடு சூரிய எரிசக்திக் கொள்கை 2012, அம்மா தமிழ்நாடு தொலை நோக்குப் பார்வை 2023 மற்றும் தேசிய சூரிய இயக்கம் ஆகியவற்றின் நோக்கங்கள் ஒருங்கிணைக்கப்படும்.

தமிழ்நாட்டுக்கு வழங்கிய தொலைநோக்கு பார்வை 2023 ஆவணத்தின் படி, உயர்ந்த பொருளாதார மற்றும் சமூக குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், புதிய எரிசக்தி கொள்கை ஒன்று உருவாக்கப்படும்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்

Leave a comment