புதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது!

1956 0

காவிரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் பல முன்னெடுத்துவரப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் – தமிழக மக்களின் குரல்களை மத்திய பாஜக அரசோ, மாநில எடப்பாடி அரசோ கிஞ்சித்தும் காது கொடுத்து கேட்க முன்வரவில்லை.

தொடர்ச்சியாக மாநில உரிமைகள் பறிபோவதை கண்டு மனம் நொந்த மதிமுக தொண்டர் சிவகாசி ரவி உள்ளிட்ட நால்வர் தற்கொலை செய்துகொண்டு உயிர்நீத்தனர். இவர்களின் தற்கொலைகளானது தமிழகத்தில் ஒரு வித அழுத்தமான சூழலை உண்டாக்கிய நிலையில், நேற்று மதிமுக சார்பில் தமிழக உரிமைகளுக்காக உயிர் நீத்த சிவகாசி ரவி உள்ளிட்ட நால்வருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க ஸ்டாலின், வைகோ, ஐயா வீரமணி, திருமா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய திருமா, “இனி தமிழக மக்கள் எவரும் தங்கள் இன்னுயிரை இப்படி போக்கிக்கொள்ளக்கூடாது. எதிர் வரும் பிரச்சனைகளை நோக்கி வீரியமாக களமாடுதலே தலை சிறந்த வீரம்” என தெரிவித்தார்.

மேலும், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தமிழகத்திற்கான போராட்ட களங்களை அறியாதவர்கள் இன்று அவரை விமர்சித்து வருகின்றனர். ஆனால், தமிழர் இறையாண்மை களத்திலும் – தமிழ்த்தேசிய களத்திலும் இடையறாது களமாடும் கொள்கைப்போராளி வைகோ” என பேசினார்.

திருமாவின் இந்த பேச்சு வைகோவை விமர்சிக்கும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் என தங்களை அறிவித்துக்கொள்ளும் நபர்களுக்கான பதிலாகவே கருதப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், விசிக தலைவர் திருமாவும் தமிழீழ தேசிய தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களின் அன்பினையும், நம்பிக்கையினையும் பெற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment