போதியளவு நீர் கிடைத்துள்ளமையினால் மகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்- சிறிசேன

349 0

அதிக மழைவீச்சி காரணமாக மகாவலி வலயங்களிலுள்ள நீர்த்தேக்கங்கள் தற்போது நீரினால் நிரம்பியுள்ளதுடன், மகாவலி வலயங்களை சேர்ந்த விவசாய மக்களுக்கு நீர்த் தட்டுப்பாடின்றி பயிர்ச்செய்கையினை ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நெல் அதிகமாக பயிரிடப்படும் மகாவலி வலயங்களில் நெற்பயிர்ச்செய்கையை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான புதிய செயற்திட்டங்களின் ஊடாக எதிர்வரும் சிறுபோகத்தில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு மகாவலி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக காணப்பட்ட அதிக வரட்சியான காலநிலை காரணமாக மகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், விவசாயிகளின் வாழ்க்கையில் சீரற்ற நிலை இருந்தது.

எனினும் வரட்சியான காலநிலை மாறி போதியளவு மழைவீழ்ச்சி கிடைத்துள்ளமையினால் விவசாய நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், முறையான செயற்திட்டங்களின் மூலமாக எதிர்வரும் சிறுபோகத்தில் விவசாய நடவடிக்கைகளை புத்துணர்வுடன் ஆரம்பிப்பதற்கான சகல சலுகைகளையும் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் சிறுபோகத்தில் மகாவலி வலயங்களில் சுமார் 90,000 ஹெக்டெயர்களில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொண்டு நூறு சதவீத அறுவடையை பெற்றுக்கொள்வதற்கான புதிய திட்டங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

Leave a comment