கிளிநொச்சியில் விலைவாசியை கண்டித்து நூதன போராட்டம்!

226 0

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி காக்காக்கடை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணி டிப்போ சந்திவரை சென்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணியில் விலைவாசி உயர்வை கண்டித்து பாம்பு ஒன்று கொடும்பாவியாக இழுத்துச் செல்லப்பட்டதுடன், போக்குவரத்து கட்டண அதிகரிப்பைக் கண்டித்து மாட்டுவண்டியில் பயணித்து மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதேவேளை சமையல் எரிவாயு விலை அதிகரிப்பைக் கண்டித்து சிலிண்டர்களை ஏந்திச் சென்றதோடு, பல்வேறு சுலோகங்களை தாங்கிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுவதாக மக்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர். அத்தோடு, வரவு செலவு திட்டத்திற்கு கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கியமை தொடர்பில் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

 சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார, பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment