பாகிஸ்தான் அணு குண்டு சோதனைக்கு கண்டனம் தெரிவித்து பலூசிஸ்தான் மக்கள் ஆர்ப்பாட்டம்

445 0

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் பகுதியில் 1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட அணு குண்டு சோதனைக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகளில் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்துக்குட்பட்ட சாகாய் மாவட்டத்துக்குட்பட்ட மலைப்பகுதியில் கடந்த 28-5-1999 அன்று பாகிஸ்தான் அணு குண்டுகளை வெடித்து சோதித்தது. இதனால், அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் அணுக்கழிவு மாசுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
அப்பகுதியில் வசித்த மக்கள் நோய்வாய்ப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும், இங்கு கடும் வறட்சியும், விவசாயம் செய்ய இயலாத நிலையும் நீடிக்கின்றது.
இந்த அணு குண்டு சோதனை நடைபெற்ற 20-ம் ஆண்டை நினைவுகூரும் வகையிலும், பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்களால் பலூசிஸ்தான் பகுதி மக்களுக்கு உள்ள அச்ச உணர்வை வெளிப்படுத்தும் வகையில் உலகளாவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த பலூசிஸ்தான் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன், பிரிட்டன் தலைநகர் லண்டன், கனடாவின் வான்கோவர் நகரம், ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னா மற்றும் ஸ்வீடன் நகரில் வரும் 28-ம் தேதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ளுமாறு அந்நகரங்களில் உள்ள பலூசிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினத்தில் #NoToPakistaniNukes என்ற ஹாஷ்டேக் உடன் டுவிட்டரில் அணு ஆயுதங்களுக்கு எதிரான இணையவழி பிரசாரம் செய்யவும் பலூசிஸ்தான் விடுதலை இயக்கம் திட்டமிட்டுள்ளது.

Leave a comment