தேசிய அரசுக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை களைப் பார்க்கும் போது தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
புளியங்குளத்தில் நேற்று நடைபெற்ற மாதிரி வீட்டுத் திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதில் எமக்கும் பெரும் பங்கு இருக்கிறது. அந்த மாற்றம் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை பெற்று தரும் என்று நினைத்திருந்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 3 வருடங்கள் கடந்திருக்கின்றன.
தேசிய அரசுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைப் பார்க்கும்போது நாங்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் நடைபெறுமா? என்று என்ன தோன்றுகிறது.
இன்னும் 2 வருடங்களே இந்த அரசுக்கு இருக்கிறது. அதற்குள் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதுடன், போரால் பாதிக்கப்பட்ட எமது பகுதிக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதுடன் எமது மாகாணத்துக்கு அதிகமான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்