இலங்கையை சீனா கடன்வலையில் வீழ்த்தியுள்ளது!

239 0

ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களின் ஊடாக இலங்கையை சீனா கடன்வலையில் வீழ்த்தி இருப்பதாக, அமெரிக்காவின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவார்ட் ஆய்வாளர்கள் குழு ஒன்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்காக மேற்கொண்ட இரகசிய ஆய்வு அறிக்கை ஒன்று, அவுஸ்திரேலியாவின் பினன்ஸ் ரிவீவ் என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், இலங்கை சீனாவின் கடன்வலையில் சிக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் போன்ற உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக முன்னைய அரசாங்கத்தினால் 8 பில்லியன் டொலர்கள் சீனாவிடம் இருந்து கடன்பெறப்பட்டது.

இந்தகடன் தொகையை இலங்கை அரசாங்கத்தினால் மீளவழங்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்தநிலையில் அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைகம், சீனாவிற்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலம், இலங்கையை சீனா தமது கடன்வலையில் வீழ்த்தி இருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரகசிய அறிக்கையில், சீனாவின் கடன்புத்தகத்தில் உள்ள 16 நாடுகளது விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற முதலீட்டு செயற்பாடுகளானது, இரண்டு தரப்புக்கும் சாதகம் ஏற்படுத்தும் வகையிலானவை என்று சீன அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment