சியாச்சினில் கடும் பனியில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் நலனுக்காக புனே தம்பதியினர் தங்களது நகைகளை விற்று பண உதவி செய்தது பலரின் பாராட்டை பெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த தம்பதியினர் சுமீதா – யோகேஷ் சித்தாடே. யோகேஷ் இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுமீதா ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற சுமீதா, ராணுவ வீரர்களின் வீரம், தியாகம் மற்றும் பெருமைகளை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், சியாச்சினில் கடும் பனியில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் நலனுக்காக புனே தம்பதியினர் தங்களது நகைகளை விற்று பண உதவி செய்துள்ளனர்.
இமயமலையில் இந்திய – பாக்., எல்லையில், சியாச்சின் பனிச் சிகரம் அமைந்துள்ளது. இங்கு கடும் குளிரில் பணியாற்றும் வீரர்களுக்கு உதவி செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.
கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதால் அங்கு பிராண வாயு அளவு குறைவாக இருக்கும். இதனால் ராணுவ வீரர்களுக்கு அடிக்கடி மூச்சு திணறல் பிரச்னை ஏற்படும். இதைப் போக்க அங்கு ஒரு பிராணவாயு நிலையம் அமைக்க முடிவானது.
இதையறிந்த, அந்த தம்பதியினர் தங்களிடம் இருந்த தங்க நகைகளை விற்றனர். அதன்மூலம் கிடைத்த 1.25 லட்சம் ரூபாயை, பிராணவாயு நிலையம் அமைக்க நன்கொடையாக வழங்கினர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ராணுவ வீரர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே எங்களது நகைகளை விற்றோம் என தெரிவித்துள்ளனர்.
ராணுவ வீரர்களின் நலனுக்காக தங்கள் நகைகளை விற்ற ஓய்வுபெற்ற தம்பதியினருக்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

