யேர்மனி கற்றிங்கன் நகரத்தில் நடைபெற்ற தமிழக் கல்விக் கழகத்தின் 28 ஆவது அகவை நிறைவு விழா- 2018

14571 0

யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களைக் கற்பித்து வரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 28 வது அகவை நிறைவு விழாவை 22.4.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி கற்றிங்கன் நகரில் மிகச் சிறப்பாக நடாத்தியது

ஒவ்வொரு அரங்குகளிலும் நாடு தழுவியமட்டத்தில் தமிழ்மொழி தமிழ்த்திறன் கலைத்திறன் போன்ற வற்றில் முதல் மூன்று நிலையைப் பெற்ற மாணவர்களுக்கு விசேடமான மதிப்பளிப்புக்கள் நடைபெறுகின்றன.

120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 5, 10, 15 வருடங்கள் தொடர்ச்சியாக ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பளிப்பு நடைபெறுவதுடன் 20 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்வாரிதி என்ற சிறப்புப் பட்டமும் 25 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்மாணி என்ற சிறப்புப் பட்டமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பை நிறைவு செய்து தமிழாலயத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு விசேடமான பட்டமளிப்பு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 2017 இல் 12 ஆம் ஆண்டில் தேர்வெழுதிச் சித்தியடைந்த 217 மாணவர்களைத் தாயகத்திலிருந்து விழாவுக்குப் பிரதம விருந்தினர்களாக வருகை தந்திருந்த பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் அவரின் துணைவியார் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் சான்றிதழ் வழங்கி மதிப்பளித்தனர்.

தமிழாலயங்களில் 12 ஆம் ஆண்டுவரை மொழிபயின்று வெளியேறும் மாணவர்களில் 350 க்கு மேற்பட்ட பிள்ளைகள் மீண்டும் தமிழாலயங்களில் இணைந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுவது போற்றுதலுக்குரிய விடயமாகும். அப்படியான இளைய ஆசிரியர்களின் மொழியறிவை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்க் கல்விக் கழகம் 2016 ஆண்டில் பட்டயக் கற்கை நெறி என்ற புதிய நூலை உருவாக்கி வெளிவாரிக் கற்றல் முறையினூடாக அத்திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு பட்டையக் கற்கை நெறியில் பங்கேற்றுச் சித்தியடைந்தவர்களுக்கு பேராசிரியர்களால் பட்டமளிப்பு நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 28 ஆண்டுகளில் தமிழாலயஙகளில் மொழியும்இ பண்பாடுகளையும் பயின்ற பல மாணவர்கள் இன்று யேர்மனியில் உயர் கல்வியை நிறைவு செய்து அங்கே விமான ஓட்டிhயகவும், நீதிபதியாகவும் , வைத்தியராகவும், விஞ்ஞானியாகவும், வியாபரியாகவும், அரசியல் வாதியாகவும் உயர்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தாயகத்தின் மேல் பற்றுள்ளவர்களாகம் வாழும் நாட்டவர்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் அவர்கள் யேர்மனியின் பொருளாதாரத்தின் அச்சாணியாக இயங்குகின்றனர். அவர்கள் நாம் இருக்கும் நிலைகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி தமிழீழுத்தின் விடிவுக்காக தாம் இருக்கும் இடங்களில் குரல் கொடுக்கின்றனர். அவற்றை நோக்கும்போது எமது தமிழ் ஆசான்களின் அற்புதமான தமிழ்ப்பணிக்குக் கிடைக்கும் காணிக்கை என்பதில் ஐயமில்லை.

தமிழாலயங்களில் 1990 களின் ஆரம்பத்தில் இணைத்த பல மாணவர்கள் இன்று தமது பிள்ளைகளுடன் தமிழாலயங்களின் கதவுகளை மீண்டும் தட்டுகின்றார்கள். பேரன் பேத்தி கண்ட பெருமையுடன் தொடர்கின்றது யேர்மனியில் தமிழ்ப்பணி….

Leave a comment