இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகள் தொகை அதிகரிப்பு!

5903 0

இந்தியாவில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு மீள்குடியேறிவரும் மக்கள் தொகையில் சற்று அதிகரிப்புநிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு மீள்குடியேறியுள்ள மக்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் மாவட்டச் செயலகத்தின் காணிக் கிளையில் யாழ் மாவட்ட செயலக மேலதிக செயலாளர் காணி எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து யாழ் மாவட்டத்தில் 1110 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. அவ்வாறு வருகை தந்தவர்களுக்கான பதிவு நடவடிக்கைகளே இன்று நடைபெறுகின்றன.அத்துடன், காணியில்லாத 25 குடும்பங்களுக்கு காணியுடன் சேர்ந்த புதிய வீட்டுத்திட்டத்தினை முதற்கட்டமாக உரும்பிராயில் வழங்குவதற்கு தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

தற்போது 1110 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றன. அவற்றில் முதற்கட்டமாக 80 வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களை வீடமைப்பு அதிகாரசபை, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக வழங்க எதிர்பார்த்துள்ளோம் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மேலும் தெரிவித்தார்.

Leave a comment