சீனாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக இறந்தனர். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப் ஒன்று அமைந்துள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 18 பேர் சிக்கி பலியாகி உள்ளனர். 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சீனாவில் பாதுகாப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவது இல்லை. அதனை அமல்படுத்துவதும் முறைப்படுத்தப்படவில்லை. இதனால் அந்நாட்டில் தீ விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.
சீனாவில் கடந்த 2015-ல் நர்சிங் ஹோம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் பலியான சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய கேள்விகள் எழுந்தன. இந்த தீ விபத்து சம்பவத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 21 பேரை சிறையில் அடைக்க கடந்த வருடம் நீதிமன்றம் உத்தரவிட்டது.