தலவாக்கலை வட்டகொட்ட சவுத் மடக்கும்புற மற்றும் யொக்ஸ்போட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 350 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் எருமை மாடுகளின் நடமாட்டம் காரணமாக பல அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருவதாக அங்குள்ள தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.இத்தோட்ட பகுதியில் உள்ள தேயிலை செடிகளில் காட்டு எருமைகள் நடமாடுவதால் பெண்கள் தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியாமல் மிகவும் கஷ்டத்துடன் இருக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்கையில் இரவு நேரங்களில் காட்டு எருமையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இத்தோட்ட மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.
பாடசாலை மாணவர்களும் காலை வேளையில் பாடசாலைக்கு செல்லும் போது எருமை மாடுகளின் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளனர்.
எருமை மாடுகளின் அட்டகாசத்தினால் பயிர்செய்கைகளை மேற்கொள்ள முடியாமல் போவதாகவும் இத்தோட்டத்தில் உள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்களின் நலன் கருதி தோட்ட நிர்வாகம் செயற்படாமல் தமது பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல் அசமந்த போக்கினை கடைப்பிடிப்பதாக தோட்ட மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தமது பிரச்சனைகளுக்கு தோட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

