மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி

324 0

தஞ்சை அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயமும், பெற்றோருக்கு ரூ.1000 ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

அறிவு கண்ணை திறப்பது கல்வி. இந்த கல்வியை அரசு பள்ளிகள் குறைந்த கட்டணத்தில் வழங்கினாலும் இன்றும் தனியார் பள்ளிகளை தான் பெற்றோர் நாடி செல்கின்றனர்.

ஒரு சில அரசு பள்ளிகள் மட்டுமே தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. தற்போது அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்பட அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் கவனம், விளையாட்டு, திறன்வளர்ப்பு என பல துறைகளிலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் சிறப்பு வகுப்புகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.

இந்த நிலையில் அரசு பள்ளியில் தனியார் பள்ளிகளை போல் மாணவர்கள் ஆர்வமாக வந்து சேரும் வகையில் புது யுக்தியை தஞ்சை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்படுத்தி உள்ளனர்.

அதாவது இந்தாண்டு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோர்களுக்கு ரூ.1000 ஊக்கப்பரிசும் வழங்கி வருகின்றனர்.

இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக பெற்றோர்-ஆசிரியர் கழகம் முடிவு செய்தது. அதன்படி பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வரை சேர்ந்த 15 மாணவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயமும், மாணவர்களின் பெற்றோர்களுக்கு ரூ.1000 ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டது. நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பில் பள்ளியில் சேர்ந்த 15 மாணவர்களுக்கு தங்க நாணயம், மற்றும் பெற்றோர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இதையொட்டி பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். பெற்றோர் – ஆசிரியர் கழக தலைவர் பிரகலாதன், தலைமை ஆசிரியர் வாசுகி , கிராம மக்கள், கலந்து கொண்டனர்.

Leave a comment