சீனாவின் குய்லின் பகுதியில் உள்ள தாவோஹுவாஜியாங் ஆற்றில் இரண்டு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் குய்லின் பகுதியில் தாவோஹுவாஜியாங் என்னும் ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் அவ்வப்போது படகு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்.
இதனிடையே, இந்த ஆற்றில் நேற்று படகு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த போட்டி குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டவில்லை.
இந்நிலையில், படகு போட்டிக்கு தயாராகி கொண்டிருந்த போது பயிற்சி ஓட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இரண்டு படகுகள் ஆற்றில் மூழ்கின. இதில் இரண்டு படகுகளிலும் பயணம் செய்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர். உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சுமார் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்த படகு போட்டிக்கு ஏற்பாடு செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

