எரிபொருள் விலை உயர்வு !

236 0

எரிபொருள் விலையை உயர்த்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடும் முகமாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாகவோ அல்லது மக்களுக்கு மனியமுறையில் சலுகை வழங்கும் நிறுவனமாகவோ இருக்க எந்த அரசாங்கமும் தீர்மானம் எடுக்கவில்லை.

ஆனால் இது தொடர்பாக அரசாங்கம் விரைவாக ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டும்.  இன்று எல்லோரும் எரிபொருள் விலை கூடுமா, இல்லையா என அதிகம் பேசுகின்றனர்.

நிதி அமைச்சு அதிகாரிகளும் இது தொடர்பாக எம்முடன் கலந்துடையாடிவருகின்றனர்.  எனினும் விலை மாற்றம் தொடர்பாக அரசாங்கமே தீர்மானம் எடுக்கும்.

இது தொடர்பாக அமைச்சரவை, பிரதமர் மற்றும் ஜனதிபதியே முக்கிய முடிவை எடுப்பர்.’ என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தம்மிக  ரணதுங்க  கருத்துத் தெரிவிக்கையில்,

‘நாங்கள் இந்த நிறுவனத்தை பொறுப்பேற்று 10-11 மாதகாலமாகிறது. இந்த காலப்பகுதியில் பல வெற்றிகளை பெற முடிந்துள்ளது.

பல வருடங்களாக செயல்படுத்த முடியாதிருந்த பல அபிவிருத்தித் திட்டங்களை தற்போது நாம் முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றோம்.

உதாரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்களுக்கான புதிய எரிபொருள் விநியோக திட்டத்தை 45 நாட்களுக்குள் விலைமனு கோரிக்கையூடாக ஒப்பந்தம்  செய்யமுடிந்தது.  இதனால் எமது நாட்டுக்கு 2 மில்லியன் டொலரை நாங்கள் சேமித்துள்ளோம்.

ஜி.ஐ.ஜீ. நிறுவனத்தினூடாக 2001ஆம் ஆண்டு முடிவெடுத்த திட்டமான விமானங்களுக்கான எரிபொருள் சுத்திகரிப்பு இயந்திரம் பொறுத்தும் திட்டம் ஆரம்பித்துவைக்கப்படவில்லை. ஆனால் நாம் நான்கு மாதங்களுக்குள் இந்த திட்டத்தை நிறைவுசெய்தோம்.

தற்போது கொலன்னாவையில் புதிய எரிபொருள் தாங்கிகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். மேலும் 7 புதிய எரிபொருள் தாங்கிகள் அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்’ என பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்தார்.

Leave a comment