புற்று நோயால் அவதியுற்று வரும் மனைவியைப் பார்க்க நவாஸ் ஷெரீப் மகளுடன் லண்டன் சென்றார்

226 0

புற்று நோயால் அவதியுற்று வரும் மனைவி குல்சூம் நவாசை பார்க்க நவாஸ் ஷெரீப்பும், மகள் மரியமும் லண்டன் சென்று உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் மீதும், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்குகள் தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதித்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கு மத்தியில் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ராய்விண்டில் உள்ள தனது ஜதி உம்ரா இல்லத்துக்கு சாலை போட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக அவர் 21-ந் தேதி லாகூரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய பொறுப்புடைமை அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் ஊழல் வழக்குகளில் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் 23-ந் தேதி ஆஜர் ஆக வேண்டும்.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் நவாஸ், தொண்டை புற்றுநோயால் அவதியுற்று வருகிறார். தற்போது லண்டன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நவாஸ் ஷெரீப் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். இந்த நிலையில், குல்சூம் நவாசுடன் நவாஸ் ஷெரீப்பும், மகள் மரியமும் உடன் இருக்க விரும்பி லண்டன் சென்று உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஊழல் வழக்குகளில் விசாரணை உச்சகட்டத்தை அடைந்து வருவதால், அவர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ள நிலையில் பாகிஸ்தான் திரும்புவார்களா என தெரியவில்லை.

Leave a comment