கல்லடி நாவலடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் சிரமதான நிகழ்வு(காணொளி)

346 0

மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களினால் இன்று சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நேற்று மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வின்போது விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இச்சிரமதான நிகழ்வில், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன் உட்பட கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து மாநகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட மாநகரசபை ஊழியர்கள், பொதுமக்களும் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அன்னை பூபதியின் நினைவு தினத்தை தங்களின் அனுமதியில்லாமல் யாரும் நடத்தக்கூடாது என அன்னை பூபதியின் குடும்பத்தினர் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ள நிலையில் இந்த சிரமதான நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைக்காக 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உண்ணாவிரதம் இருந்து தியாக தீபம் அன்னை பூபதி உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை வெறும் அரசியல் நோக்கமாகக் கருதாது, தமிழர்களின் தாயக விடுதலைக்காக ஒப்பற்ற தியாகம் செய்த அன்னை பூபதியின் நிகழ்வுகளின் முன்னாயத்த வேலைகளுக்காக, இந்த சிரமதானம் முன்னெடுக்கப்பட்டதாக பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

Leave a comment