மகளுக்கு ஆசிபா என பெயர் வைத்த கேரள பத்திரிகையாளர்!

413 0

கேரள மாநிலத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தனது மகளுக்கு ஆசிபா எனப் பெயர் சூட்டியுள்ளார். அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் குவிந்து வருகிறது.

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் கடத்தப்பட்டு கோயிலில் அடைத்துவைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் படுகொலையும் செய்யப்பட்டார். ஆசிபாவுக்கு நீதி கேட்கும் குரல் ஒவ்வொரு நாளும் ஓங்கி ஒலித்து வருகிறது. மேலும், ஆசிபா எங்களுக்கும் மகள்தான் என்ற கோஷமும் வலுத்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் பத்திரிகை ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் ரஜித் ராம் என்பவர் தனது மகளுக்கு ஆசிபா எனப் பெயர் சூட்டியிருக்கிறார். மகளின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த அவர், "நான் அவளுக்குப் பெயர் வைத்துவிட்டேன். ஆம் அதே பெயர்தான். ஆசிபா கெ.ராஜ். அவள் என் மகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜித்தின் இந்த போஸ்ட்டை பல்லாயிரக்கணக்கானோர் லைக் செய்ததுடன் பலரும் பகிர்ந்துள்ளனர். பின்னூட்டங்களில் பலர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். இந்தப் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி உலா வருகிறது.

Leave a comment