சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்களை பார்க்க 30 ஆயிரம் பேர் குவிந்தனர்

222 0

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போர்க்கப்பல்களை பார்க்க நேற்று 30 ஆயிரம் பேர் குவிந்தனர். இன்றும் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிடலாம்.

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்று வரும், இந்திய ராணுவ கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக ‘சுமித்ரா’, ‘ஷயாத்ரி’, ‘கமோர்டா’, ‘ஐராவத்’ ஆகிய 4 போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த கப்பல்களை 13-ந்தேதி (நேற்று முன்தினம்) மற்றும் 15-ந்தேதி (இன்று) ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் போர்க்கப்பல்களை பார்வையிட பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால், நேற்றும் போர்க்கப்பல்களை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்தது. நேற்று கூடுதலாக ‘குக்ரி’ என்ற போர்க்கப்பலும் சென்னை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த போர்க்கப்பல்களை பார்வையிட சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக் கான மக்கள் நேற்று அதிகாலை முதலே தீவுத்திடலில் வந்து குவிந்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போர்க்கப்பல்களை பார்க்க தங்களை பதிவு செய்துகொண்டனர்.

அவர்கள் பஸ்கள் மூலம் சென்னை துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். கேமரா, உணவு பொருட்கள், கைப்பைகளும் எடுத்துவர அனுமதியில்லை என்றாலும் செல்போன்களை கொண்டு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதால், கப்பலில் உள்ள ‘ஹெலிபேடு’ தளத்தில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் மற்றும் கப்பற்படை வீரர்களுடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

போர்க்கப்பலை பார்த்தது குறித்து, காஞ்சீபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ஷாலினி கூறும்போது, “முதல் முறையாக, இப்போது தான் கப்பலையே பார்த்திருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனை எங்கள் பள்ளியில் படிக்கும் சக மாணவ-மாணவிகளுடன் உற்சாகமாக பகிர்ந்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும், சிக்கந்தர் என்பவர் கூறுகையில், “போர்க் கப்பலை முழுமையாக பார்வையிடலாம் என்று நினைத்து வந்தேன். ஆனால், அனைத்து பகுதிகளையும் பார்க்க முடியவில்லை. மேலும், ஒரு கப்பலை மட்டுமே பார்க்க அனுமதித்தனர். எனினும், குழந்தைகளை அழைத்து வந்து போர்க்கப்பல்களை காண்பிக்கலாம். அவர்கள் மகிழ்ச்சி அடைவார் கள்” என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் பார்வைக்காக நேற்று கூடுதலாக ஒரு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதிலும், நேற்று முன்தினம் அனைத்து கப்பல்களையும் பார்க்க அனுமதித்தது போன்று நேற்று அனுமதிக்கவில்லை. அதாவது, நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கனை கப்பலுக்குள் நுழையும் போது காண்பித்துவிட்டு சென்றால் போதும். அதை வைத்து அடுத்த கப்பல்களையும் பார்வையிடலாம்.

ஆனால் நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக கூட்டத்தை சமாளிக்கும் வகையில், பொதுமக்கள் கப்பலுக்குள் நுழையும் போதே கப்பற்படை வீரர்கள் டோக்கனை வாங்கிக் கொண்டனர். இதனால் அடுத்த கப்பலுக்குள் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

போர்க்கப்பல்களை பார்வையிட குவியும் பொதுமக்களை சமாளிக்க நேற்று கூடுதலாக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இன்று(நேற்று) தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனை சமாளிக்க நேற்று 16 தனியார் பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 20 மாநகர பஸ்கள் வரவழைக்கப்பட்டன. நாளை(இன்று) கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், 40 மாநகர பஸ்கள் கேட்டு உள்ளோம்.

மேலும் வரிசையில் நிற்கும் பொதுமக்கள் வெயிலில் நிற்பதால், இன்று(நேற்று) கூடுதலாக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. நாளை(இன்று) இந்த சாமியானா பந்தல்கள் இன்னும் அதிகரிக்கப்பட்டு சிறப்பு வரிசைகள் கூட்டப்பட உள்ளன.

இன்று(நேற்று) மாலை 5 மணி வரை 30 ஆயிரம் பேர் போர்க்கப்பல்களை பார்த்து சென்றுள்ளனர். நேற்று(நேற்று முன்தினம்) 12 ஆயிரம் பேர் மட்டுமே பார்வையிட்டனர். நாளை(இன்று) சுமார் 40 முதல் 50 ஆயிரம் பேர் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். போர்க்கப்பல்களை பார்வையிட வருவோர் தங்களின் அடையாள அட்டையின் ‘ஒரிஜினல்’ மற்றும் ‘ஜெராக்ஸ் காப்பி’களை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment