புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உரிமையுடன் வாழ பிறக்கும் விளம்பி வகை செய்திட வேண்டும்- இரா.சம்பந்தன்

226 0

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம் மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி வருடம் வகை செய்திட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள புதுவருட வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைவாழ் தமிழ், சிங்கள இரு இனங்களையும் சேர்ந்த மக்களால் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்ற ஒரே பெருநாளாக சித்திரைப் புத்தாண்டு அமைகின்றது.

அத்தகு சிறப்புமிகு பெருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது உளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஒரு நாடு பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டுமானால், அந்நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம் நிலவுவது அத்தியாவசியமாகும். எமது நாட்டில் அவ்விலக்கினை அடைவதற்குத் தடையாக உள்ள காரணிகளில் முதன்மையானதாக விளங்குவது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினையாகும்.

அப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி வருடம் வகை செய்திட வேண்டும்.

எனவே, ஈரினத்தவரும் பொதுவாக இப் புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடுவது போன்று சகல விடயங்களையும் விட்டுக்கொடுப்புடன் கையாளும் சகஜநிலை இந்நாட்டில் தோன்றி இன நல்லிணக்கம், சுபிட்சம் மற்றும் அபிவிருத்தி ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும்.

அந்த வகையில் சகல இனத்தவரிடையிலும் ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான இன்னல்கள் நீங்கி பிறக்கும் புத்தாண்டில் நல்லனவெல்லாம் நடந்தேறிட வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை  இறைஞ்சுவதுடன் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவரின் புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளது.

Leave a comment