மன்னார் நகர சபையும் கூட்டமைப்பு வசம்!! எதிர்த்து நின்ற மஹிந்த அணிக்கு தோல்வி!!

218 0

இரகசிய வாக்களிப்பின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் தலைவர் மற்றும் உப தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதால் மன்னார் நகர சபையினை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த சபையின் தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வ குமரன் (டிலான்) ஆகிய இருவரும் முன் மொழியப்பட்டனர்.

இதன்போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் நடுநிலமை வகித்ததுடன், ஏனைய 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்நிலையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) 8 வாக்குகளையும், சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வ குமரன் (டிலான்) 7 வாக்குகளையும் பெற்றனர்.

இதன்படி அதிகூடிய வாக்குகளை பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) மன்னார் நகர சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து இடம்பெற்ற உப தலைவர் தெரிவின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சூசை செபஸ்ரியன் ஜோன்சன் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் ஆகிய இருவரது பெயர்கள் முன் மொழியப்பட்டன.

பின்னர் இரகசிய வாக்கெடுப்பு இடம் பெற்றதில், 16 உறுப்பினர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ், பெர்னாண்டோ ஜோசப் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வ குமரன் (டிலான்) ஆகிய மூவரும் வாக்களிக்காது நடுநிலமை வகித்தநிலையில், ஏனைய 13 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சூசை செபஸ்ரியன் ஜோன்சன் 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் 5 வாக்குகளையும் பெற்ற நிலையில், கூடிய வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் சூசை செபஸ்ரியன் ஜோன்சன் மன்னார் நகர சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த அமர்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment