காணி அபகரிப்புக்கு இடைக்காலத் தடையுத்தரவு

388 0

625-0-560-320-160-600-053-800-668-160-90-78மன்னார் பள்ளிமுனைக் கடற்கரைப் பகுதியின் 25 வீட்டுத் திட்டப் பகுதியில் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு அபகரிக்கும் நோக்கில் அளக்கப்படவிருந்த நில அளவீட்டு நடவடிக்கைக்கு மன்னார் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளது.

பள்ளி முனை 25 வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தபோது அப்பகுதியில் சிறீலங்காக் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர். இந்தக் காணியை தமக்கு வழங்குமாறும் அதற்குப் பதிலாக இழப்பீடு வழங்கப்படும் எனவும் இராணுவம் தெரிவித்ததையடுத்து காணி அளவீடு நடைபெற்றபோது மக்களின் எதிர்ப்பினால் அது தடைப்பட்டது.

இதனையடுத்து 25 வீட்டுத்திட்ட மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவேண்டுமெனவும் இல்லாவிட்டால் காணி அளவீடு செய்யப்பட்டு கடற்படையினருக்கு வழங்கப்படும் என எச்சரிக்கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டதில் வாழ்ந்து வரும் 19 பேரும் கடந்த திங்கள் கிழமை (5) சட்டத்ரணி மூலம் மன்னார் நீதிமன்றில் இவ் காணியை அளவீடு செய்ய தடை உத்தரவு வழங்கும்படி அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதன்போது பள்ளிமுனை மக்களின் 25 வீட்டுத்திட்ட குடியிருப்பு காணியில் கடற்படையினர் குடியிருந்து கொண்டு குறித்த காணியை தங்கள் வசப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த காணி பிரச்சினை குறித்த 25 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 19 பேர், மன்னார் நீதிமன்றில் கடந்த 11.02.2013 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவ் வழக்குகள் தற்பொழுது மன்றில் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் பள்ளிமுனை கடற்படை முகாமிற்காக பொறுப்பதிகாரிகள் திடீர் என மாற்றம் பெற்று வருவதனால் இவர்களின் பெயர்களை மன்றில் மாற்றத்துக்கு உள்ளாகி வருவதனால் இவ் வழக்கு தொடர்ந்தும் நிலுவையிலேயே இருந்து வருவதுடன் தவணையிடப்பட்டு வருவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியை நில அளவை செய்து அதனை விஸ்தரித்து கடற்படையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் மக்கள் ஒன்றிணைந்து காணி அளவீட்டை நிறுத்தியமை தொடர்பில் மன்னார் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் குறித்த காணியை நில அளவை செய்ய கடந்த 6 ஆம் திகதி(6-09-2016) வரை நில அளவை அதிகாரிகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்படாது விட்டால் குறித்த காணி நில அளவீடு செய்யப்பட்டு கடற்படைக்கு வழங்கப்படும் எனவும் மன்றில் தெரிவித்தனர்.

எனவே குறித்த காணி தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைகள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த காணியை நில அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து கட்டளை பிறப்பிக்குமாறு சட்டத்தரனி த.வினோதன் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் சார்பாக மன்றில் தெரிவித்தார்.

சட்டத்தரணியினால் மன்றில் சமர்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா, குறித்த காணியின் வழக்கு முடிவுக்கு கொண்டு வரும் வரை இரண்டு தரப்பினரும், குறித்த காணியில் எந்த விதமான அபிவிருத்தி வேளைகளையும் முன்னெடுக்க இடைக்கால தடையுத்தரவை வழங்கினார்.