தமிழகத்தில் காலியிடம் இல்லை; புதிதாக அரசியலுக்கு வர நினைப்பவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லலாம்: முதல்வர் பழனிசாமி

564 0

தமிழக அரசியலில் காலியிடம் ஏதும் இல்லை. புதிதாக அரசியலுக்கு வர நினைப்பவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அதிமுக சார்பாக 120 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “தமிழகத்தில் பலரும் அரசியலுக்கு வருகிறேன் என புதிது புதிதாக கிளம்பிவிட்டார்கள். தமிழகத்தில் காலியிடத்தை நிரப்பப் போகிறார்களாம். இங்கே எங்கு வெற்றிடம் இருக்கிறது? தமிழக அரசியலில் அனைத்து காலியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லலாம்.

பல ஆண்டுகளாக உழைத்து, நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி மக்களிடம் செல்வாக்கு பெற்றது அதிமுக” என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரைக் குறிப்பிட்டு முதல்வர் பழனிசாமி இவ்வாறு பேசியுள்ளார்.

Leave a comment