நுவரெலியா பிரதேச சபை இ.தொ.கா வசம் – தலைவராக வேலு யோகராஜா

15073 25

நுவரெலியா பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு கந்தபளை பிரதேச செயலக காரியாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் மத்திய மாகாணஉள்ளுராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச சபையின் தலைவராக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் போட்டியிட்டு தெரிவான வேலு யோகராஜாவும், உப தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன சார்பில் போட்டியிட்டு தெரிவான கே.பீ.வி. சரத்குமாரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவர், உப தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு இரகசிய வாக்கெடுப்பாகவே நடைபெற்றது.

இச்சபைக்குத் தலைவரை தெரிவுசெய்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் போட்டியிட்டு தெரிவான வேலு யோகராஜா மற்றும் ஐக்கிய தேசிய கட்சிசார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ருவன் சம்பத் அவர்களும் போட்டியிட்டனர்.

இதில் 12 வாக்குகளைப் பெற்று வேலு யோகராஜா அவர்கள் தலைவர் பதவிக்குத் தெரிவானார். இதற்கு எதிராகப் போட்டியிட்ட ருவன் சம்பத் அவர்களுக்கு 9 வாக்குகளே பெறமுடிந்தது.

இதேவேளை உபதலைவர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டுத் தெரிவான கே.பீ.வி. சரத்குமார அவர்களும், ஐக்கிய தேசிய கட்சிசார்பாக ஆர்.தமிழ்ச்செல்வன் அவர்களும் போட்டியிட்டனர்.
இதில் கே.பீ.வி. சரத்குமார 12 வாக்குகளைப் பெற்று உபதலைவர் பதவியை தனதாக்கிக் கொண்டார். இதற்கு எதிராகப் போட்டியிட்ட ஆர்.தமிழ்ச்செல்வன் 9 வாக்குகளே பெறமுடிந்தது.

23 உறுப்பினர்களைக் கொண்ட நுவரெலியா பிரதேச சபை தலைவர் தெரிவு போட்டியின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சியைச் சேர்ந்த 01 உறுப்பினர்கூட்டத்திற்கு கால தாமதமாகவே கூட்டத்திற்கு சமூகமளித்ததால் தலைவர் தெரிவிற்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இதேவேளைஇக்கூட்டத்திற்கு சமூகமளித்த மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பித்தக்கது.

நுவரெலியா பிரதேச சபைக்குத் தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 09 ஆசனங்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு 07 ஆசனங்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 05 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு 01 ஆசனமும், ஐக்கிய மக்கள் கட்சிக்கு 01 ஆசனமும்கிடைக்கப்பெற்றன.

Leave a comment