இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த இலங்கை மத்திய வங்கியை நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இலங்கையின் மத்திய வங்கி மற்றும் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு ஆகிய இரு நிறுவனங்களும் இந்த அதிவிசேட வர்த்தமானி மூலம் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் ஏற்கனவே நிதி அமைச்சின் கீழ் காணப்பட்டவை. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரதமரின் கீழ் இருந்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சுக்கு இந்நிறுவனங்கள் சுமத்தப்பட்டன. இதுவே மீண்டும் நிதி அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.

