மாளிகாவத்தை – அல்லாமா இக் பால் மாவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 25 வயது மதிக்கத்த இளைஞர் ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அடையாளம் தெரியாதோர் முன்னெடுத்துள்ள இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்
புப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, மாளிகாவத்தை அல்லாமா இக்பால் மாவத்தையில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் அவர் பயணித்ததாக நம்பப்படும் முச்சக்கர வண்டியொன்றும் அவ்விடத்தில் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டதாகவும் அதில் அவர் பயணித்தாரா இல்லையா என்பது குறித்து விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் காணப்படும் இடத்தில் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ரவைகள் காணப்படும் நிலையில் 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியால் சூடு நடத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. உயிரிழந்த நபர் தொடர்பில் தகவல்கள் உடனடியாக தெரியவராத போதும் அவர் நிப்பு எனும் பெயரில் அறியப்படுபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் நீதிவான் விசாரணைகள் இடம்பெறும் வரை சடலம் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிச் அத்தியட்சர் சாலிய சில்வா, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஸா ஆகியோரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

