பாக்கு நீரிணை கடலை 12 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சென்னை மாணவன் சாதனை!

19332 0

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜ ஈஸ்வர பிரபு தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை கடலை 12 மணி நேரத்தில் நீந்தி சனிக்கிழமை கடந்து சாதனை புரிந்தார்.

பாக் ஜலசந்தி கடற்பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேசுவரம் தீவும், அதனைத் தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான  ஆதாம் பாலமும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியும் கொண்ட கடற்பகுதியாகும்.

பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக 1954-ம் ஆண்டு நீந்திக் கடந்தார். தொடர்ந்து 5.4.1966 அன்று கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் நீந்திக் கடந்தார். மேலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வழக்கறிஞர் குமார் ஆனந்தன். நீச்சல் வீரரான இவர் 1971-ம் ஆண்டு தலைமன்னாரிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்தார். 12.04.1994ல் 12 வயதான குற்றாலீசுவரன் பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தார்.

இந்நிலையில் இந்திய அளவில் பல்வேறு நீச்சல் போட்டியில் சாதனை படைத்த சென்னை முடிச்சூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான ராஜ ஈஸ்வர பிரபு (20) தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்க்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்திய-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தலைமன்னாருக்கு ஒரு விசைப்படகு,  ஒரு நாட்டுப்படகில் ராஜ ஈஸ்வர பிரபு மற்றும் அவருடன் மீனவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் புறப்பட்டு வெள்ளிக்கிழமை சென்றனர்.

இது குறித்து  ராஜ ஈஸ்வர பிரபு கூறியதாவது,

தலைமன்னாரில் நீந்தத் தொடங்கியதிலிருந்து 6 மணி வரையிலும் இருட்டாக இருந்ததால் முதலில் மெதுவாக நீந்தத் தொடங்கினேன். பின்னர் சூரிய உதயமானதும் எனது வேகத்தை அதிகரித்தேன். இலங்கை கடற்படையினர் சர்வதேச எல்லை வரையிலும் பாதுகாப்பிற்காக வந்தனர். பின்னர் இந்திய கடலோர காவல்படையினர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.

நீரோட்டத்தின் வேகம் அதிகமானதாக இருந்தது. ஜெல்லி மீன்கள் அதிகளவில் இருந்தன. ஜெல்லி மற்றும் ஆபத்தான மீன்களை எதிர்கொள்ள உடம்பில் பிரத்யேக பேஸ்ட்டினை பூசியிருந்ததால் அவற்றால் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை.

சிறுவயதிலிருந்தே நீச்சலில் ஆர்வம் இருந்ததால் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் போதே முறையாக நீச்சல் பயிற்சியினை முறையாக கற்கத் தொடங்கினேன். விரைவில் ஆங்கில கால்வாய் உள்பட மற்ற 6 கால்வாய்களையும் நீந்திக் கடக்க வேண்டும் என்பதே தனது லட்சியம்” என்றார்.

தலைமன்னாரில் அதிகாலை 3 மணி  6 நிமிடத்தின் போது நீந்தத் தொடங்கிய ராஜ ஈஸ்வர பிரபு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு மதியம் 2 மணி 56 நிமிடங்களுக்கு வந்தடைந்தார்.

 

Leave a comment