யுத்தத்திற்குப் பின்னர் தடுமாறும் இலங்கை.!

226 0

யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறுகால சூழலில் நாடு தடுமாறி திணறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியின் 143வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கல்லூரி தின நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

நேற்று கல்லூரி அதிபர் மரியான்தம்பி பற்ரிக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் போப்பாண்டவரின் இலங்கைக்கான பிரதிநிதி ஆயர் கலாநிதி பியரென் நுயன் வன் டொற், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜேசெப், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துஸித்த பனன்வல மற்றும் படையதிகாரிகள், அடிகளார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய வியாழேந்திரன், இலங்கைத் திருநாட்டில் தலைதூக்கிய இனவாதமும் மதவாதமும் இன்று சர்வதேசம் வரை நம்மைக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளது.

யுத்தம் ஏற்பட்டு அதன் பின்னரான துப்பாக்கிச் சூடுகள் ஓய்ந்த நிலையில் ஏற்பட்டுள்ள நிலைமாறு காலச் சூழலில் நாடும், நாட்டு மக்களும், சர்வதேசமும் இலங்கை பற்றி ஒரு ஸ்திரமான சூழலுக்குள் வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதையே சமகால நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

நாங்கள் அனைவரும் இலங்கை மாதாவின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் மறந்து செயற்பட்டால் அமைதியைக் கொண்டு வரமுடியும்.

இனவாதம் மதவாதம் அற்ற புதியதொரு இளஞ் சமுதாயத்தை உருவாக்கி அமைதியான நாடாக அவர்களுக்கு இந்த நாட்டை கையளிக்க வேண்டும் என்றார்.

Leave a comment