பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி சமர்ப்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இவ்வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
14 பிரதான காரணிகளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள குறித்த பிரேரணையில் கைச்சாத்திடும் நடவடிக்கைகள் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடந்த ெவள்ளிக்கிழமை தொடக்கம் ஆரம்பமானது.
எனினும், சில உறுப்பினர்கள் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொண்டுள்ளதனால் அவர்களின் கையொப்பம் இன்னும் பெறப்பட வில்லை. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கையும் தற்போது இடம்பெற்று வருகிறது.
ஆயினும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே ஆவணத்தில் கைச்சாத்திடப்போவதில்லை.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தனி ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ள அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வேறு தனித்தனி ஆவணங்களில் கைச்சாத்திடவுள்ளனர்.
இருந்தபோதிலும் இவ்வாறாக தனித்தனியாக கைச்சாத்திட்டுள்ள பிரே ரணைகள் மூன்றும் ஒரே தடவையில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் இணை தேசிய அமைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சொய்சா தெரிவிக்கையில், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்கள் பலர் ஆதரவு வழங்கவுள்ளதாக வாக்குறுதியளித்துள்ளனர். அத்துடன், ஏனைய உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனையை சாத்தியமாக்குவதற்கே கூட்டு எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் அப்பணிகளை நிதானமாக மேற்கொண்டு வருகிறோம். ஆகவேதான் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரனையை கடந்த வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்தோம். எனினும் ஏனைய கட்சிகளின் வேண்டுகோள் மற்றும் நாட்டில் நிலவிய அசாதாரண சம்பவங்களினால் அதனை பிற்போடுவதற்கும் நடவடிக்கை எடுத்தோம்.
ஆகவே அதற்கான சாதகத்தன்மை தற்போது ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலும் எதிர்வரும் வெவ்வாய்க்கிழமை நம்பிக்கையில்லாப் பிரேரனையை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பற்கு எதிர்பார்த்துள்ளோம். சிலவேளை அன்றைய தினம் சமர்ப்பிப்பதற்குத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அதனை சமர்ப்பிக்க முடியும் என்பதை உறுதியாக் கூறிக்கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனை தொடர்பில் அலட்டிக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சி இதற்கு முன்னர் நம்பிக்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. அதேபோல் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவரப்படுமிடத்தும் அதனை தோற்கடிக்க முடியும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.