ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் 14 உபகுழுக்கூட்டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ளன. தற்போதைய நிலையில் ஜெனிவாவில் பல உபகுழுக் கூட்டங்கள் நிறைவுபெற்றுவிட்டன. இன்னும் எட்டுக்கும் மேற்பட்ட உபகுழுக் கூடடங்கள் நடைபெறவுள்ளன.
இந்த கூட்டங்களில் இலங்கை பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
குறிப்பாக எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில் ஒரு உபகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
குறிப்பாக இன்று 13 ஆம்திகதி தமிழ் உலகம் என்ற அமைப்பினால் இலங்கை தொடர்பில் ஒரு உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. 7 ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ள இந்த உபக்குழுக்கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
மேலும் நாளை புத்துருவாக்க சமூக திட்ட முன்னணி என்ற அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டம் 21ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ளது. 15 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஒரு சர்வதேச மனித உரிமை அமைப்பினால் இலங்கை விவகாரம் தொடர்பில் விசேட உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக இலங்கையில் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் விவகாரம் தொடர்பிலேயே இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு இலங்கை விவகாரம் தொடர்பில் உரையாற்றவுள்ளனர். 21 ஆம் இலக்க அறையில் இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தக்கூட்டமும் 21ஆம் இலக்க அறையிலேயே நடத்தப்படவுள்ளது.
மேலும் மற்றுமொரு சர்வதேச அமைப்பினால் எதிர்வரும் 19 ஆம்திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தக்கூட்டமானது இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க பசுமை தாயகம் அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான உபக்குழுக்கூட்டம் 20 ஆம்திகதி 25 ஆம் இலக்க அறையில் நடைபெறவுள்ளது. இலங்கையின் நிலைமாறுகால நீதி தொடர்பாக இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதே தினத்தன்று சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பினால் இலங்கை தொடர்பான ஒரு விசேட உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
27ஆம் இலக்க அறையில் இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தவகையில் இந்த அனைத்து உபக்குழுக்கூட்டங்களிலும் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளன. விசேடமாக இலங்கை மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த உபகுழுக்கூட்டங்களில் ஆராயப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.