அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை கூட்டு எதிர்க் கட்சி செய்கின்றது- மஹிந்த

245 0

இன முரண்பாட்டைத் தீர்க்க அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய  நடவடிக்கைகளை கூட்டு எதிர்க் கட்சி செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிங்கள – முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

சிங்களவர்களும் முஸ்லிம்களும் பொறுமையாக செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும், அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை கூட்டு எதிர்க் கட்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி இந்த இனப்பிரச்சினைக்கு கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள இரு பாராளுமன்ற உறுப்பினர்களை குற்றம்சாட்டுகின்றனரே என அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது,

அவர்கள் குற்றம்சாட்டும் இருவரும் இந்த இன முரண்பாட்டை தீர்ப்பதற்கான கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் இன முரண்பாட்டை ஏற்படுத்துபவர்களாக இருந்தால், இதில் கலந்துகொண்டிருக்க வேண்டியதில்லை. இனப் பிரச்சினையை ஐக்கிய தேசிய கட்சி ஒவ்வொருவரின் தலையிலும் சுமத்துவதற்கு முயற்சிக்கின்றது எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment