திரிபுராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் ஏற்படும்!

843 0

திரிபுராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் ஏற்படும் என தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது. தாமதமாக இருந்தாலும், இப்போது நடைபெறுவது மகிழ்ச்சி தான். நிர்வாக சீர்கேடுகள் இருந்தாலும் அவற்றை சீர்செய்ய வேண்டியது இக்கூட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். இது ஆரோக்கியமான வெளிப்பாடாக உள்ளது.

காவிரி பிரச்சினையை வைத்து பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். காவிரி பிரச்சினையில் முதல்-அமைச்சர் அழைத்தாலும், துணைத்தலைவர் வரவேண்டும் என்பதற்காக ஒரு நாள் தாமதமாக செல்கிறார்.

பிரதமர் சந்திக்க மறுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். உண்மையை திரித்து காவிரியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார். சித்தராமையா, தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க மறுத்தபோது கண்டித்தீர்களா? உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகு கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்டுகிறீர்கள்?

தண்ணீர் தரவேண்டும் என திருநாவுக்கரசர் மூலமாக வலியுறுத்தி இருக்கலாமே. கர்நாடக முதல்-மந்திரியை நேரில் சந்தித்து இருக்கலாமே. பிரதமர் சந்திக்க மறுக்கவில்லை, முதலில் அந்த துறையை சேர்ந்தவரை சந்திக்கும்படி தான் கூறியுள்ளார்.

இலங்கை பிரச்சினையில் நாடகம் நடத்தியது தெரியும். காவிரி பிரச்சினையில் ராஜினாமா செய்ய துணைக்கு ஏன் அ.தி.மு.க. எம்.பி.க்களை அழைக்கிறீர்கள். துணிவு இருந்தால் 4 தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதத்தை உடனே தாருங்கள். பிரதமர் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வார். சந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

தமிழகத்தை உதாசீனப்படுத்த வேண்டிய சூழ்நிலை பிரதமருக்கு கிடையாது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அடிப்படை பணிகள் தொடங்குகிறது. திரிபுராவில் கம்யூனிஸ்டு கட்சி நிராகரிக்கப்பட்டு உள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும். திரிபுராவில் ஏற்பட்ட நிலை, தமிழகத்திலும் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment