பொலிஸ் நிலையத்துக்கு செல்லாத சிவாஜிலிங்கம்

211 0

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியில், கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ளது. குறித்த காணியை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (22) அளவீடு செய்யப்படும் என நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய அன்றைய தினம் சுவீகரிப்பை கைவிடுமாறு கோரி பொதுக்கள், காணி உரிமையாளர்கள் முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நில அளவை திணைக்கள வாகனத்தை சேதப்படுத்தியமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நில அளவை திணைகள அதிகாரிகளால் கடந்த 22 முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று இருதரப்பினரையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இன்றைய தினம் நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தபோதும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்கவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களிடம் தொடர்புகொண்டு வினவியபோது இன்று வடக்கு மாகாண சபை அமர்வு நடைபெறுவதால் சமூகமளிக்கவில்லை என தெரிவித்தார்.

Leave a comment