அரசாங்கத்தின் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஒன்றினை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியல் கூட்டணி மீண்டும் கைகோர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று அமைச் சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
புதிய அரசியல் அமைப்பு குறித்து கலந்துரையாட இது பொருத்தமான நேரமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்து இரண்டு வாரங்களுக்கு மேலான காலம் கடந்துள்ள நிலையில் இப்போதுள்ள நிலைமைகள் குறித்து கல்விமான்கள், அரசியல் நிபுணர்கள் அனைவருடனும் நாம் கலந்துரையாடியுள்ளோம். இதன்மூலம் அரசாங்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து எம்மால் அடையலாம் காண முடிந்துள்ளது. இப்போது நடைபெற்றுள்ள தேர்தல் முடிவுகளின் மூலமாக நாட்டில் பல மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளன. அதேபோல் அடுத்து வரவுள்ள மாகாணசபை மற்றும் ஜனாதிபதி தேர்தலில் போது மீண்டும் தேசிய அரசாங்கமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் இந்த தேர்தலில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியல் கூட்டணி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதை மக்கள் இந்த தேர்தலின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிடைக்கும் வாக்குகளை பறிக்கும் சூழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே இப்போது நாம் ஆயத்தமாகி பாரிய அரசியல் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். பொருளாதார, சமூல மாற்றங்களை ஏற்படுத்தும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். நடுத்தர மக்களை இலக்கு வைத்து நாம் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினை உள்ளது, காணி பிரச்சினைகள் உள்ளன. இவற்றினை நாம் இனங்கண்டு செயற்பட வேண்டும். கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். சைட்டம் சிக்கல்கள் போன்றவற்றுக்கு முழுமையாக தீர்வு காண வேண்டும். நடுத்தர, அடிமட்ட மக்களின் பொருளாதார செயற்பாடுகளை பலப்படுத்தாது நிலையான பொருளாதார தன்மை ஒன்று உருவாக்கப்படுவதில் எந்தப்பயனும் இல்லை.
தேர்தல் முறைமை குறித்து கருத்திற் கொள்ள வேண்டும். அடுத்து நடைபெறும் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமையில் உள்ள குழப்பங்களை மாற்றியமைக்க வேண்டும். அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு குறித்து நாம் இப்போது கலந்துரையாட முடியாது. அரசியல் அமைப்பு குறித்து கலந்துரையாடும் நேரம் இதுவல்ல.
அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் அமைப்பு திருத்தம் அவசியம். எனினும் அதனை இப்போதுள்ள நிலையில் எம்மால் முன்னெடுக்க முடியாது. ஆகவே இப்போதுள்ள நிலைமையில் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு அவசியமற்ற ஒன்றாகும்.
அரசாங்கம் பலமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதில் குறுகிய மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.
அதேபோல் சூழலியல் பிரச்சினைகளை உடனடியாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். பிரதான இரண்டு கட்சிகளின் இளம் அரசியல் வாதிகள் மத்தியில் இந்த விடயங்களை ஒப்படைக்க வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் எமக்கு சரியான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான ஜனாதிபதி-பிரதமர் தலையீட்டில் புதிய வேலைத்திட்டங்கள் அவசியம். புதிய அரசியல் வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க தாமதமாகும் நிலையில் நாம் தலையிட்டு மாற்றங்களை முன்னெடுக்க முன்வருவோம். எவ்வாறு இருப்பினும் சரியான நகர்வுகளையே மக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆகவே அதற்கான வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.