யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம்

221 0

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றும் (21), நாளையும் (22) இடம்பெறவிருந்த கல்வி சாரா ஊழியர்களுக்கான நேர்முக தேர்வைப் பிற்போடுமாறு கோரி, ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள நேர்முகத் தேர்வை, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபடவுள்ளதையறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், தேர்வினை அருகில் உள்ள யாழ்ப்பாணம் திறந்த பல்கலைக்கழகத்தில் நடத்துவதுக்கு ஏற்பாடு செய்தது. எனினும் அதனையும் தடுத்து நிறுத்தி, திறந்த பல்கலைக்கழக வாயிலில் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஏற்கனவே பணியிலுள்ள ஊழியர்கள், குறைந்த கல்வி தகமையுடன் கூடிய அனுபவத்துடன் பணி புரிந்து வருகின்றனர்.

ஆனால் தற்போது உள்வாங்கப்படுபவர்கள் கூடிய கல்வி தகமையுடன் அதே பதவிக்கு உள்வாங்கப்படுகிறார்கள். இது எதிர்காலத்தில் ஊழியர்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்துவதோடு, சம்பள உயர்வு மற்றும் தர உயர்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, ஏற்கனவே உள்ள ஊழியர்களையும் அவர்களின் சேவை கால அடிப்படையில் ஒரே தரப்படுத்தலுக்குள் உள்வாங்க வேண்டும் என தெரிவித்தும், அதுவரையில் இந்த நேர்முக தேர்வினை பிற்போட வேண்டும்” எனவும் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a comment