சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படையினர் நடத்திய ஆவேச தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப்படையினர் இதுவரை இல்லாத அளவுக்கு ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஒர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர்.
இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் ஓயாது வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில், சிக்கி கடந்த 48 மணி நேரத்தில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் 10 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள்
இன்னும் சில நாட்கள் இதே போன்ற தாக்குதல் தொடர்ந்தால் பொதுமக்கள் பலி எண்ணிக்கை கனிசமாக உயரும் என அச்சம் எழுந்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். இந்த ரசாயன தாக்குதலை நடத்தியது கிளர்ச்சியாளர்கள் என்றும் அரசுப்படைகள் என்றும் மாறி மாறி குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.