சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் அதனுடன் தொடர்புடைய சாட்சிகளை மறைத்தமை, பொய்யான சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பிலும் தான் அறிந்த அனைத்து விடயங்களையும் இரகசிய வாக்கு மூலமாக, சம்பவம் இடம்பெறும் போது கல்கிசை பகுதிக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி இன்று வழங்கவுள் ளார்.
கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹாலிடம் அவர் தனது சட்டத்தரணியான அத்துல எஸ். ரணகல ஊடாக குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக அந்த வாக்கு மூலத்தை அளிக்க அவர் அனுமதி பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் பிற்பகல் 1.00 மணிக்கு இந்த இரகசிய வாக்கு மூலத்தை அவர் வழங்க வுள்ளார்.
லசந்த விக்ரமதுங்க படுகொலை விசாரணைகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் சாட்சியங்களை அழித்தவர்கள் ஊடாக திட்டம் வகுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
சாட்சிகளை அச்சுறுத்தியமை தொடர்பில் கைதான முதல் சந்தேகநபர் இராணுவ சார்ஜன்ட் மேஜர் உடலாகம பிணையில் உள்ள நிலையில், அண்மையில் சாட்சியங்களை அழித்தமை, பொய்யான சாட்சியங்களை உருவாக்கியமை தொடர்பில் 2 ஆம், 3 ஆம் சந்தேக நபர்களாக கல்கிசை பொலிஸ் நிலைய குற்றவியல் பொறுப்பதிகாரி திஸ்ஸ சுஹந்தபால, முன்னாள் மேல் மாகாணத்தின் தெற்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ். திசேரா, விசாரணைப் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரிசோதகர் சுதத் குமார ஆகியோரின் கீழ் விசேட விசாரணைகள் இடம்பெறுகின்றன.