கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெஹல்பத்தர பகுதியில் வர்த்தகர் ஒருவரை சுட்டுக்கொலை செய்தமை தொடர்பில் சந்தேகநபர்களுக்கு, மோட்டார் சைக்கிளை வழங்கி கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக கூறப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவின் ஆலோசனைக்கு அமைவாக பேலியகொட குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கையிலேயே அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹாவில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கிச் சூடுகள், கொலைகள் தொடர்பில் விசாரணை செய்துள்ள பேலியகொட குற்றத் தடுப்புப் பிரிவினர் அவை மண் வர்த்தகம் தொடர்பில் அங்கு நிலவும் மாபியா நடவடிக்கையின் பிரதி பலன் என்பதற்கான ஆதாரங்களை திர
ட்டியுள்ளனர். அத்துடன் இந்த மாபியாவின் பின்னணியில் தற்போது சிறையில் உள்ள பிரபல பாதாள உலகத் தலைவன் மாஹிலங்கமுவே சஞ்சீவவின் தொடர்பு குறித்தும் விசாரணையாளர்கள் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 6 ஆம் திகதி 65 வயதுடைய வர்த்தகர் கே.நெவில் பெரேரா என்பவர் காலை 8.20 மணியளவில் ஸ்கூட்டி டியோ ரக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இது தொடர்பில் பிரதான விசாரணைகள் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித்த புசல்லவின் நேரடி கண்காணிப்பில் விசேட பொலிஸ் முன்னெடுக்கும் நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்யும் மேலதிக பொறுப்பு பேலியகொட குற்றத்தடுப்புப் பிரிவிடம் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
அதன்படி, பேலியகொட குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் பண்டாரவின் ஆலோசனைக்கு அமைவாக பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக தலைமையிலான குழுவினர், உதவி ஒத்தாசை புரிந்த இருவரை கைது செய்துள்ளனர்.
30 வயதுடைய பிரசன்ன மதுஜித் எனும் பாதாள உலக உறுப்பினரும் அவரது உறவுமுறை சகோதரரான 23 வயதுடைய பீ.தினுக என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.