தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து நளினி வழக்கு!

236 0

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை எதிர்த்து நளினி தொடர்ந்துள்ள வழக்கிற்கு, மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் ஆயுள் தண்டனை கைதியாக 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து கடந்த 1-ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கைதிகளை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன்படி முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசுக்கு போதிய அதிகாரம் உள்ளது.

ஆனால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435 (1)(அ)படி, சி.பி.ஐ. விசாரித்த வழக்கு என்பதால் ஆயுள் தண்டனை பெற்ற என்னை போன்ற கைதிகளை மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது மாநில அரசின் இறையாண்மைக்கும், அதிகாரத்திற்கும் எதிராக உள்ளன.

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்போது அவர்களின் நன்னடத்தை மற்றும் ஏற்கனவே அனுபவித்த தண்டனை காலத்தை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். மறுவாழ்வு அளிப்பதற்காகத்தான் கைதிகளை அரசு விடுதலை செய்கிறது. எனவே, கைதிகள் மத்தியில் இதுபோன்ற பாகுபாடுகளை பார்க்கக்கூடாது.

எனவே குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 435 (1) (அ) சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையையும் ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 19-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a comment