தேசிய அரசாங்கத்தை நீடித்து செல்வதில் தடைகளை தகர்க்கும் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும், தேசிய அரசாங்கத்தின் தேவை மற்றும் அவற்றில் ஜனாதிபதி – பிரதமரின் இணக்கப்பாடு தொடர்பாகவும் நட்புறவு ரீதியில் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெளிவுபடுத்தியுள்ளார். ஜனாதிபதி- பிரதமர் இருவரும் மக்கள் ஆணையினை முதன்மைப்படுத்தி பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணவேண்டியதன் அவசியத்தையும் இருவருக்கும் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் நகர்வுகளில் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முரண்
பாடுகள் எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது தனித்த அரசியல் பயணம் குறித்து தனித்தனியே ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியே சந்தித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இடையில் ஏற்பட்டுள்ள பிணக்குகளை சுமுகமான வகையில் தீர்த்து வைக்கவும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் அவர் இந்த சந்திப்புகளை முன்னெடுத்துள்ளார்.
இதன்போது தேசிய அரசாங்கத்தின் தேவை குறித்தும், நல்லாட்சியை முன்னெடுத்து செல்வதில் தலைமைகளின் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய அரசாங்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆணை மீறப்பட கூடாது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிடைத்துள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் கடந்தகால மக்கள் ஆணையினை தூக்கி வீசி விடக் கூடாது. மக்களின் ஆணை என்னவென்பதை புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் பூரணமடையாத நிலையில், வாக்குறுதிகளை மீறும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கக் கூடாது என்று சம்பந்தன் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசிய அரசாங்கத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களை கருத்திற் கொண்டு, தடைகளை நிவர்த்தி செய்து தேசிய அரசாங்கமாகவே முன்னெடுத்து செல்வதே சிறந்த வழிமுறையாக அமையும். முரண்பாடுகள் இருக்கின்ற காரணத்தினால் மக்கள் ஆணையினை மீறிய தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டாம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய அரசாங்கம் ஆட்சியமைக்க இந்த நாட்டின் மனித உரிமைகள் பேணப்படும், நல்லிணக்கம் உருவாக்கப்படும், அடிப்படைவாதம் நீக்கப்பட்டு சகலருக்குமான ஜனநாயக அரசாங்கம் உருவாகும், தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரப்படும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆகவே அவற்றை மீறவும் முடியாது. மீறவும் கூடாது. அவ்வாறு செயற்படுவது புதிய பிரச்சினைகளை உருவாக்கிவிடும் என்பதையும் சம்பந்தன் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சந்திப்பை அடுத்து அன்றைய இரவே பிரதமரை சந்தித்த இரா. சம்பந்தன். பிரதமருடனான சந்திப்பின் போதும் இக்காரணிகளை முழுமையாக எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார்.
பிரதமருடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் குறிப்பிடுகையில்
கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் கொடுத்த ஆணை என்னவென்பதை அரசாங்கமாக இரண்டு தலைமைகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நாட்டில் நல்லாட்சியை உருவாக்க அனைவரும் இணைந்து ஒரு மாற்றத்தினை கொண்டுவந்துள்ள நிலையில் அது முழுமையடைய முன்னர் குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றிணைந்து ஆட்சியமைத்த போது இந்த நாட்டின் மனித உரிமைகளை பலப்படுத்தல், தேசிய பிரச்சினைகளில் உறுதியான தீர்வுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்தல், நாட்டின் பொருளாதார மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படுவது என்ற காரணிகளில் முன்வைக்கப்பட்டன. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றது.
பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கமாக செயற்படும் நிலையிலேயே இவற்றினை வெற்றி கொள்ள முடியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் அதற்கான புரிந்துணர்வுகள் மூலமாகவே செயற்பட ஆரம்பித்தன. அவ்வாறு இருக்கையில் இன்று மக்கள் ஆணைக்கு மாறாக தனிப்பட்ட காரணிகளை கருத்திற் கொண்டு ஆட்சியமைப்பது மேலும் நாட்டில் பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்தும். பிணக்குகளை தீர்க்க பேச்சுவார்த்தைகளை சுமுகமாக செயற்பட வேண்டும். அதை விடுத்து வேறு வழிகளில் செயற்பட ஆரம்பித்ததால் புதிய பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும் என்பதை எடுத்துரைத்தார்.
இது தொடர்பில் சம்பந்தன் கேசரிக்கு கருத்து வெளியிடுகையில்,
மேலும் இந்த அரசாங்கத்தில் பிரச்சினைகள் உள்ளன. பிரதான இரண்டு கட்சிகள் மத்தியிலும் பல்வேறு பிணக்குகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு தலைவர்களையும்
சந்தித்து பேசியதில் அவர்களின் பிரச்சினைகள் என்னவென்பது எனக்கு தெரியவந்துள்ளது. எனினும் பிரச்சினைகளை தீர்க்க சுமுகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் ஆணையினை கருத்திற் கொண்டு அதற்கமைய பேச்சுவார்த் தைகளை முன்னெடுக்க முயற்சித்தால் சுமுகமான தீர்வு ஒன்றை எட்ட முடியும் என்பதை குறிப்பிட்டேன். எனது கருத்தும் அதுவாகவே உள்ளது. ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ புத்தி கூற நான் செல்லவில்லை, நிலவும் பிரச்சினைகளில் நல்லிணக்க ரீதியில் சுமுகமான தீர்வுகளை எட்ட பொதுநலத்துடன் இரண்டு தரப்பினரையும் சந்தித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.