லிந்துலை பெயார்வெல் பகுதியில் கார் விபத்துக்குள்ளாகியதில் 2 பேர் பலி (காணொளி)

248 0

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நேற்று பிற்பகல் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம்செய்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் கார் பாய்ந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளம்பெண் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பியூமிசாந்த் பிரசாதி பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, உயிரிழந்த இளைஞன் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

நுவரெலியா பகுதியிலிருந்து கம்பஹா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காரில் இளைஞனும், யுவதியும் மாத்திரம் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, உயிரிழந்த இருவரின் சடலங்களும் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு செங்கலடி களுவான்கேணி கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 16 வயதுடைய ராஜா டென்வர் கிருபா என்ற மாணவன் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலாம் செங்கலடி பிரேதச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவன் தலவாக்கலை, நுவரெலியாவை பிறப்பிடமாகக் கொண்டதாகவும், கல்விப் பொதுத்த தராதர உயர்தரத்தில், தொழில்நுட்ப துறையில் கல்வி கற்பதற்கு மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment