மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டு அவரை பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்.
அதிகமான வாக்குவீதத்தை பெற்றுக்கொண்டதால் நீங்கள் ஏன் பதவி விலக வேண்டும் என மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் ரணிலிடம் கேட்டுள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக் ஷ தற்போதைய நிலைமையில் ஆட்சி அமைக்கவோ, பிரதமர் பதவி ஏற்கவோ முன்வர மாட்டார். காரணம் அடுத்து வரும் இரண்டு வருடங்கள் மிகவும் கடினமானவை என அவருக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் குறிப்பிடுகையில்;
மஹிந்த ராஜபக் ஷ இந்தத் தேர்தலில் அதிகமான பிரதேச சபைகளின் அதிகாரத்தையே கைப்பற்றியுள்ளார். ஆனால் மொத்தமான மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு எமது பக்கமே இருக்கிறது. அதனை தேர்தல் முடிவுகள் நன்றாக உணர்த்துகின்றன.
மேலும் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி அமைப்பதற்கான எந்த முயற்சியையும் முன்னெடுக்கமாட்டார். காரணம் அடுத்து வரும் இரண்டு வருடங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும். மஹிந்த ராஜபக் ஷ பெற்ற கடன்களுக்காக அதிகமான மீள் கொடுப்பனவுகள் அடுத்தவருடமும் அதற்கு அடுத்த வருடமும் செய்யப்படவேண்டும்.
எனவே அது மிகவும் கடினமாக அமையும் என அவருக்கு தெரியும். அதனால் தான் அவர் ஆட்சி அமைத்து பிரதமர் பதவியை பெறும் முயற்சிகளை முன்னெடுக்காமல் இருக்கிறார்.
இதேவேளை மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் ரணில் விக்கிரமவை தொடர்பு கொண்டு அவரை பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்று கூறியிருக்கின்றார். அதிகமான வாக்கு வீதத்தை பெற்றுக் கொண்டதால் நீங்கள் ஏன் பதவி விலக வேண்டும் என மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் ரணிலிடம் கேட்டுள்ளார்.

