தமிழரசின் பங்காளியாகிறது ஈபிடிபி – சபைகளில் இணைந்து செயற்பட இணக்கம் !

323 0

உள்ளூராட்சி சபைகளில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஈபிடிபி ஏற்றுக்கொண்டு தமிழரசின் பங்காளிகளாயிருக்க இணங்கியுள்ளது.

இது தொடர்பில் இன்று (13) கூடிய ஈ.பி.டி.பி உயர்மட்டம் இறுதி முடிவெடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசமைக்க ஆறு மாத காலத்திற்கு ஆதரவு வழங்குவதென்றும் ஆறு மாத கால அவர்களின் நிர்வாக நடவடிக்கைகள் திருப்திகரமாக இருந்தால் தொடர்ந்தும் பங்காளிகளாக இருப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை ஆனோல்டை யாழ் மாநகர முதல்வராக்குதல் மற்றும் ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியமைத்தல் என்ற சுமந்திரன் அணியின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள யாழ் மாநகரசபைக்கு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட பலர் போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அவ் அணி யாழ் மாநகரசபையில் சுயாதீனமாக இயங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் தேவைப்படின் தாம் ஒருவரது பெயரை யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக பிரேரிக்கவுள்ளதாகவும் புதிதாக இணைந்த உறுப்பினர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.

Leave a comment