சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பது தவறான முன்னுதாரணம்: முத்தரசன் அறிக்கை

248 0

குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதா படத்தை பேரவையில் திறப்பது முற்றிலும் தவறான முன்னுதாரணம் என முத்தரசன் அறிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறப்பது தவறான முன்னுதாரணமாகும். பேரவையில் இதற்கு முன்னர் தேசப்பிதா மகாத்மா காந்தி படத்தை அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி திறந்து வைத்துள்ளார்.

ராஜாஜியின் படத்தை அன்றைய பிரதமர் நேரு திறந்து வைத்துள்ளார். திருவள்ளுவர் படத்தை அன்றைய குடியரசு துணைத் தலைவர் ஜாஹீர்உசேன் திறந்து வைத்துள்ளார். அண்ணாவின் படத்தை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்துள்ளார்.

காமராஜர் படத்தை அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவிரெட்டி திறந்து வைத்துள்ளார். பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், காயிதேமில்லத் ஆகிய தலைவர்களின் படங்களை கேரள ஆளுனராக இருந்த ஜோதி வெங்கடாசலம் திறந்து வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர் படத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார். புகழ்மிக்க தலைவர்கள் படம் அவையில் அலங்கரித்த நிலையில், குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதா படத்தை பேரவையில் திறப்பது முற்றிலும் தவறான முன்னுதாரணமாகும். அவரது படம் பேரவையில் இடம் பெறுவது ஏற்க இயலாத ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment