மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வைகோ வலியுறுத்தல்

3626 0

இந்த ஆண்டாவது மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மருத்துவ படிப்புகளுக்கு மே 6-ந்தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், மார்ச் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 2017, மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டபோது, ஏராளமான குளறுபடிகள் நடந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கேள்விகள் வினாத்தாள்களில் இடம் பெற்றன. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழியைவிட குஜராத், மராத்தி மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததால் நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் வழக்குத் தொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்வு எழுத வந்த மாணவ மாணவியரிடம் சோதனை என்ற பெயரால் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க செயல்கள் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாயின.

தேர்வு முடிவுகள் வெளி வந்த பின்னர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டபோது, வெளி மாநில மாணவர்கள் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 1269 பேர் இதுபோன்று சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழு நடத்திய விசாரணையில், இருப்பிடச் சான்று முறையாக விசாரிக்கப்படாமலும், ஆவணங்கள் சரி பார்க்கப்படாமலும் கடந்த ஆண்டு, வெளிமாநில மாணவர்கள் 296 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட விவரம் வெட்டவெளிச்சம் ஆகியது. இதனால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தவிக்கும் நிலைமை உருவானது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு நீட் தேர்வு மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் நடத்தப்படும் என்று கூறினார். அதற்கு அடுத்த நாளே சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் மூலம்தான் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சி.பி.எஸ்.சி. மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் வெற்றி பெற்றனர்.

எனவே இந்த ஆண்டாவது மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும். மேலும் நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்த்து, மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment